செம்பனார்கோவில்: நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அடுத்த கீழ்மாத்தூர் ஊராட்சியில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மழையோடு சூறாவளி காற்று பலமாக வீசியது. அதனால் சுற்றுவட்டாரத்தில் 4 கி.மீ. தூரத்திற்கு பழமையான மரங்கள் அனைத்தும் வேரோடு சாலையில் விழுந்தன. கீழ்மாத்தூர் ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்ததால் 240க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து ஒயர்கள் வீடுகளின் மீதும், சாலைகளிலும் விழுந்தது. 150க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள், ஓடுகள் பறந்து சாலையில் விழுந்ததால்மக்கள் பீதி அடைந்தனர்.