புதுக்கோட்டை அரசு பள்ளியில் வானியல் திருவிழா

புதுக்கோட்டை, ஏப்.27: புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் வானியல் திருவிழா நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழா நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நடைபெற இருப்பதை முன்னிட்டு புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் வானியல் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வின் மூலமாக மக்களிடையே வானியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தவும், அறிவியல் மனப்பான்மையை உருவாக்கவும், குழந்தைகளுக்கு ஆய்வு மனப்பான்மையைத் தூண்டும் விதமாகவும் ஒவ்வொரு வாரமும் நகராட்சி மற்றும் கிராமப்பகுதிகளில் வானியல் நிகழ்வுகள் நடத்துவது என்று திட்டமிடப்பட்டது. இதன் முன்னோட்டமாக வானியல் திருவிழா நடைபெற்றது. 500க்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.

மூன்று தொலைநோக்கி மூலம் நிலவு, நட்சத்திரக் கூட்டங்கள், கோள்கள் குறித்து விளக்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட கருத்தாளர் செல்வராஜ், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ராஜ்குமார், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சதாசிவம் ஆகியோர் பங்கேற்று விளக்கமளித்தனர். பொதுமக்கள் மிக ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் அ.மணவாளன், மாவட்டப் பொருளாளர் விமலா, பவனம்மாள், பிரகதாம்பாள், மூத்த தலைவர் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் வீரமுத்து நிகழ்வினை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தார்.

The post புதுக்கோட்டை அரசு பள்ளியில் வானியல் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: