கொடைக்கானல், ஏப். 15: கொடைக்கானலில் நேற்று அப்சர்வேட்டரி, மூஞ்சிக்கல் மற்றும் சில இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த முகாம்கள் நகர அதிமுகவினர் நடத்துவதாக நோட்டீஸ் விநியோகித்தும், ஒலிபெருக்கியில் விளம்பரம் செய்தும் இருந்தனர். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக அரசியல் கட்சிகள் சார்பில் அரசு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்பதால் நேற்று அறிவிக்கப்பட்ட அனைத்து கொரோனா தடுப்பூசி முகாம்களும் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் கூறுகையில், ‘கொடைக்கானல் ஆர்டிஓ அலுவலகம் அருகில், கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மருத்துவ துறை சார்பில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. பொதுமக்கள் இந்த இடங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்’ என்றார்.