விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்கள்: கலெக்டர் வழங்கினார்

காஞ்சிபுரம், ஆக.31: காஞ்சிபுரத்தில் நடந்த விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் 5 விவசாய பயனாளிகளுக்கு, வேளாண் இடுபொருட்களை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. அதில், வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலை துறை, கூட்டுறவு துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, பொதுப்பணி துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு, வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

இதனையடுத்து, விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு, துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். மேலும், விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களை ஆராய்ந்து துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். கூட்டத்தில் கூட்டுறவு துறை சார்பில் 5 விவசாய பயனாளிகளுக்கு விசைதெளிப்பான், தார்பாலின், தென்னங்கன்றுகள் மற்றும் வேளாண் இடுபொருட்களை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். பின்னர், நடமாடும் மண் பரிசோதனை நிலையம் வாகனத்தை பார்வையிட்டு, மண் பரிசோதனை முறைகள் குறித்து கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) சுரேஷ், அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்கள்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: