விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் தஞ்சாவூரில் மீன் விலை கடும் உயர்வு

தஞ்சாவூர், மே 8: மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.மீன் இனப்பெருக்க தடைக்காலம் என கூறி கடந்த ஏப்ரல் 15ம்தேதி முதல் வரும் ஜூன் 15-ம்தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அரசு தடை விதித்துள்ளது. இதனால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.ஆனால் நாட்டு படகு மீனவர்கள் மட்டும் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். இதனால் குறைந்த அளவு மீன்கள் பிடித்து வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது விசை படகுகள் இல்லாமல் நாட்டுப் படகு மீனவர்கள் மட்டும் ஆழ்கடலை தவிர்த்து கரை ஓரங்களில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்த படகுகள் மூலம் பிடிக்கப்படும் மீன்களை வெளியூர் வியாபாரிகள் அதிக விலை கொடுத்து வாங்கிச்சென்று விற்கின்றனர். இதனால் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் கட்டுமாவடி போன்ற பகுதிகளில் உள்ள ஏலக்கடைகள் வெறிச்சோடி கிடைக்கின்றன. மேலும் கிராமப்புறங்களில் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு குறைந்த அளவு மீன் விற்பனைக்கு வருகிறது. இதனால் மீன் வரத்து குறைந்து விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ ரூ.300க்கு விற்கப்பட்ட காளை மீன் ரூ.700 முதல் 800 வரை விற்கப்படுகிறது. ரூ. 250க்கு விற்கப்பட்ட வவ்வால் மீன் ரூ.800 வரை விற்கப்படுகிறது. ரூ.150க்கு விற்கப்பட்ட கொடி மீன் ரூ.450 வரை விற்பனை ஆகிறது. ரூ.300க்கு விற்கப்பட்ட இறால் ரூ.650 முதல் 700 வரை விற்கப்படுகிறது. ரூ.300க்கு விற்கப்பட்ட நண்டு ரூ.700க்கு விற்பனை ஆகிறது.

The post விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் தஞ்சாவூரில் மீன் விலை கடும் உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: