மலையாளப்பட்டியில் சமுதாயக்கூடம், மகளிர் விடுதியை காணொலி மூலம் முதல்வர் திறப்பு

பெரம்பலூர், ஆக. 15: சமுதாயக்கூடம் மகளிர் விடுதியை காணொலி மூலம் முதல்வர் திறந்துவைத்தார்,
பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டியில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தையும், வேப்பந்தட்டையில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மகளிர் விடுதியையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக தலைமை செயலகத்தில் இருந்து திறந்துவைத்தார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் தொகுதி எம்பி கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் குத்து விளக்கேற்றி பார்வையிட்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதிக்கழத்தின் மூலம் வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட மலையாளப்பட்டி ஊராட்சியில் ரூ 1.55 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தையும், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ரூ 1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலக்கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டிடத்தினையும், காணொளிக்காட்சி வாயிலாக நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் எம்பி கே.என்.அருண்நேரு, எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் மலையாளப்பட்டி ஊராட்சியில் ரூ.1.55 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தில் குத்து விளக்கேற்றி பார்வையிட்டனர்.

இந்த சமுதாயக் கூட தரைதளத்தில் 60 நபர்கள் அமர்ந்து உணவருந்தும் வகையில் உணவுக் கூடம், உணவு தயார் செய்யும் கூடம், அலுவலக அறை, கழிவறைகள், பொருட்கள் இருப்பு வைத்துக் கொள்ளும் வகையிலான 2 அறைகளும், முதல் தளத்தில் 120 நபர்கள் அமரும் கூடம், மணமகன், மணமகள் அறை, கழிவறை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து, வேப்பந்தட்டையில் ரூ1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் கல்லூரி மகளிர்விடுதியில் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், எம்பிகே.என். அருண்நேரு, எம்எல்ஏ பிரபாகரன் குத்துவிளக்கேற்றி வைத்து விடுதியினை பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சிகளில் பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வாசுதேவன், வேப்பந்தட்டை அரசு கலைக் கல்லூரி முதல்வர் (பொ) சேகர், தாட்கோ செயற்பொறியாளர் அருண்குமார், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் தழுதாழை பாஸ்கர், மகாதேவி ஜெயபால், திமுக மாநில நிர்வாகி பரமேஷ் குமார், மாவட்ட துணைச் செயலாளர் சன்.சம்பத், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி, ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அனிதா, தாசில்தார் மாயகிருஷ்ணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post மலையாளப்பட்டியில் சமுதாயக்கூடம், மகளிர் விடுதியை காணொலி மூலம் முதல்வர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: