மயிலாடுதுறை மாவட்டத்தில் 2023-24ம் ஆண்டில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 51 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது

மயிலாடுதுறை, ஏப்.13: மயிலாடுதுறை மாவட்டத்தில் 2023 -2024ம் ஆண்டு 51 பணிகள் 750 கிலோமீட்டர் தூரம் ரூபாய் 8 கோடியே 6 லட்சம் செலவில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட உள்ளது என்று விவசாய சங்க நிர்வாகிகளிடம் கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார். மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதற்கு முன்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் தூர்வாரப்படவுள்ள பாசன வாய்க்கால்கள் குறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் கலெக்டர் மகாபாரதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளிடையே கலெக்டர் மகாபாரதி பேசியதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில், மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதற்கு முன்பாக எந்தெந்த பகுதிகளில் தூர்வாரப்பட வேண்டும். ஏரிகள், குளங்கள், பாசன வாய்க்கால்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப் பிரிவிலிருந்து பெறப்பட்ட மனுக்கள், நீர்வளத்துறை அமைச்சரிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள், மற்றும் அமைச்சரிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள், சட்டமன்ற உறுப்பினரிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள், நீர்வளத்துறை அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள், மாவட்ட ஆட்சியர் நடத்தும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்படுகின்ற மனுக்கள் மற்றும் நீர் வளத்துறை அலுவலர்கள் நேரடியாக தள ஆய்வு செய்து நிதி ஒதுக்கீடு மற்றும் விதிகளுக்கு ஏற்ப முன்னுரிமை மற்றும் அத்தியாவசிய அடிப்படையில் பணிகள் தூர்வார எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன வாய்க்கால்களில் உரிய நேரத்தில் கடைமடை வரை தங்கு தடையின்றி சென்றடையவும் மற்றும் வெள்ள காலங்களில் விரைவில் தண்ணீர் வடியவும் ஏதுவாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 2023 -24ம் ஆண்டு 51 பணிகள் 749.75 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.8 கோடியே, 6 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின்கீழ் பாசன ஆதாரங்களை தூர்வாருவதற்கு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கீடு வந்தவுடன் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கலெக்டர் மகாபாரதி பேசினார். இக் கூட்டத்தில் டிஆர்ஓ முருகதாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குநர் லேகா தமிழ்ச்செல்வன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், ஆர்டிஓக்கள் யுரேகா, அர்ச்சனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மயிலாடுதுறை மாவட்டத்தில் 2023-24ம் ஆண்டில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 51 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது appeared first on Dinakaran.

Related Stories: