மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது

ராமேஸ்வரம், ஜூலை 7: பெங்களூரில் இருந்து தனியார் பேருந்தில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை ராமேஸ்வரம் போலீசார் கைப்பற்றினர். ராமேஸ்வரம்-பெங்களூர் இடையே தனியார் நிறுவனத்தால் சொகுசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூரில் இருந்து பயணிகளுடன் நேற்று முன்தினம் புறப்பட்ட தனியார் பேருந்து நேற்று ராமேஸ்வரம் வந்தது. இப்பேருந்தை உச்சிப்புளி அருகிலுள்ள நாகாச்சியை சேர்ந்த டிரைவர் கருணாநிதி(40) ஓட்டி வந்தார்.

இப்பேருந்தில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக ராமேஸ்வரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் ராமேஸ்வரம் வந்த பேருந்தை போலீசார் சோதனை செய்தனர். இதில் 150 உயர் ரக மது பாட்டில்கள் இருந்ததை போலீசார் கைப்பற்றினர். இவை அனைத்தும் கர்நாடகா மாநிலத்தில் தயாரிக்கப்பட்டவை. மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் பேருந்து ஓட்டுனர்
கருணாநிதி மற்றும் ராமேஸ்வரத்தில் ஏஜெண்டாக செயல்பட்ட திட்டகுடி தெருவை சேர்ந்த மணிகண்டன்(38) இருவரையும் கைது செய்து விசாரித்தனர். இதில் நீண்ட நாட்களாக பேருந்து மூலம் மதுபாட்டில்களை கடத்தி வந்து ராமேஸ்வரம் பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

The post மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: