தரமற்ற விதைகளால் இயல்பு தன்மை மாறி விளைந்த பீர்க்கன்காய்: விவசாயி புகார்

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகில் உள்ள ஜம்புகுடப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜா. இவர் தென்பெண்ணையாற்று கரையோரமுள்ள  டொக்கம்பட்டி கிராமத்தில், 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசம்பட்டி பகுதியில் உள்ள தனியார் விதை விற்பனை கடையில், பீர்க்கன் விதைகளை வாங்கி சென்று பயிரிட்டார்.  பயிரிட்டது முதல் செடிகள் வளர்ச்சியடையாமல் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டது. இதுகுறித்து ராஜா சம்பந்தப்பட்ட விதை விற்பனை நிறுவனத்தில்  முறையிட்டார். இதையடுத்து, விவசாய நிலத்திற்கு வந்த விதை நிறுவன அதிகாரிகள், சில மருத்துகளை தெளிக்குமாறு பரிந்துரை செய்தனர். கடந்த 2  மாதமாக 10 முறைக்கு மேல் ராஜா மருந்துகளை தெளித்து வந்தார்.

ஆனாலும், பீர்க்கன் கொடியில் காய் பிடிக்காமலும், காய்களின் தன்மை மாறியும்  விளைந்தது. மேலும், சில காய்கள் முற்களோடு விளைந்து, அதன் தன்மை மாறியுள்ளது. இதனால், விளைச்சல் பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டம்  ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மாதம் போச்சம்பள்ளி தனியார் உரக்கடையில் வாங்கிய உரத்தில் மணல் கலந்திருந்தது தெரிய வந்ததை தொடர்ந்து, தற்போது தரமற்ற  விதைகள் விற்பதாக மீண்டும் புகார் எழுந்துள்ளது. இதனால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: