‘‘சேலம்காரரின் நிழல் பயத்தில் இருக்காராமே… ஏன்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனிக்காரர் மிகவும் உயரிய இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பை ஏற்றவுடன் சொந்த மாவட்டத்துக்கு வந்தாராம். அப்போது அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி வரவேற்றாங்க. தலைவாசல் பகுதியில வரவேற்பை வாங்கினாராம். அப்புறமாக, மாங்கனி நகர் நோக்கி புறப்பட்டிருக்காரு. சேலம்காரர் காருக்கு பின்னாடி யாரோட கார் போகணும் என்று ஏகப்பட்ட போட்டியாம். அப்போது எடப்பாடி தொகுதி நிர்வாகியோட காரு, நிழலானவரின் காரை டச் பண்ணிடிச்சாம். இதனால் நிழல் ரொம்பவுமே டென்சனாகிட்டாராம். சிவந்த முகத்தை பார்த்த டிரைவரு, சக கூட்டாளிகளை அழைச்சிக்கிட்டு, உரசுன காரை துவம்சம் செஞ்சிட்டாங்களாம். ஏண்டா, தொகுதியில மாஜிய ஜெயிக்க வைக்க நான் பட்டபாடு உனக்கு தெரியுமாங்குற கேள்வியோட புறப்பட்ட அந்த நிர்வாகி, விவிஐபியின் சங்ககிரி உறவுக்கிட்ட மண்டியிட்டு மன்றாடியிருக்காரு. ஏற்கனவே நிழல் மேல் ரொம்பவுமே கோபமா இருந்த அந்த உறவு, தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டிருக்காரு. ஆலச்சம்பாளையம் ஆளுங்கள பத்தி உனக்கு தெரியுமா. உன் வீட்டுக்கு வந்தே தூக்கிடுவாங்கன்னு கடுமையாக எச்சரிக்கை விடுத்திருக்காரு. இதனால நீறுபூத்த நெருப்பா இருந்த மோதல் பெரிய சத்தத்தோட வெடிச்சிருக்காம். இதனால இலை கட்சியில் யாரு பெரிய ஆளுனு தெரியல… யார் பக்கம் போனால் கட்சியில் சேப்டினு தெரியாம முழிக்கிறாங்களாம். நிழலானவரு மட்டும் பயத்தில் இருக்கிறாராம். தன்னை மிரட்டுவது குறித்து சேலம்காரரிடம் சொன்னதாக தகவல் ஓடுது.. அவர் எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘முள்ளை முள்ளால் எடுப்பதுபோல, குருவையே எதிர்த்து போராட சிஷ்யனை களத்தில் இறக்கிவிட்ட இலை கட்சி தலைவரு யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஒற்றைத்தலைமை பிரச்னையால், இலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை இழந்து, கட்சியில் இருந்து தேனிக்காரர் நீக்கப்பட்டார். இதனால், கட்சி மற்றும் பேரவை பொறுப்பில் இருந்தும் அதிரடியாக தூக்கிட்டாங்க. அந்த பதவிக்கு, இலை கட்சியின் பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உதயமானவரை துணைத்தலைவராக நியமிச்சாங்க. இதனால், இலை கட்சியின் சட்டமன்ற துணைத்தலைவர் என்ற அதிகாரத்தில், உதயமானவர் தேனி மாவட்டத்தில் அதிக அதிகாரம் செலுத்த துவங்கியுள்ளாராம். கட்சி சார்பில் சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தேனியில் அவர் பங்கேற்று, ‘உங்களுக்கு செல்வாக்கு இருந்தால், எம்.பி பதவியை ராஜினாமா செய்து, மீண்டும் போட்டியிட தயாரா’ என தேனிக்காரர் மகனுக்கு சவால் விட்டார். இதை கேட்ட பலரும் தேனிக்காருக்கு நேரடியாக விடப்பட்ட சவால். தன்னை ஏற்றிவிட்ட நபரையே பதம் பார்க்கும் செயல் என்று பேசிக்கிறாங்க. தற்போது, தொடர்ந்து தேனி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றத் துவங்கியுள்ளார். இது தேனிக்காருக்கு அதிக எரிச்சலை கொடுத்துள்ளதாம். காரணம், தேனி மக்களவை தொகுதியில், மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய இரண்டு தொகுதிகள், உதயமானவர் கட்டுப்பாட்டில் வருகிறது. தேனிக்காரர் மகன் வெற்றி பெற இந்த இரண்டு தொகுதியில் இருந்துதான் அதிக ஓட்டு கிடைத்தது. இதனால், ேதனிக்காரருக்கு சவால் விடும் நிலையில் அவர் சமூகத்தை சேர்ந்தவரை களத்தில் இறக்கி மோதவிட்டு, சேலத்துக்காரர் வேடிக்கை பார்த்து ரசித்து சிரிக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கரன்சியில் கலக்கும் காக்கி ராணியை பற்றி சொல்லுங்க கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாவட்ட காவல்துறையில் நிலஅபகரிப்பு பிரிவில் ஒரு லேடி ஆபீசர் பணியில் ரொம்ப கண்ணும் கருத்துமா இருக்காராம். அதாவது, வசூல் பண்ற பணியில இவர்தான் டாப் என்கிறார்கள் சக காக்கிகள். யாராவது கம்ளையின்ட் பண்ண வந்தா, அவ்வளவு சீக்கிரம் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மாட்டாராம். எல்லா விவரத்தையும் கேட்டுவிட்டு, ‘இவ்வளவு தொகை’ செலவாகும். அதை கொடுத்துட்டீங்கன்னா, வழக்குப்பதிவு, புலன் விசாரணை, கைது நடவடிக்கை, சொத்து பறிமுதல் என எல்லாம் வேகமாக நடக்கும் என டீல் பேசி கறந்து விடுவாராம். பிறகு, குற்றம்சாட்டப்பட்ட நபரை அழைத்து வருவாராம். அவரிடம், கைது, ரிமாண்ட், அது… இது… என நடவடிக்கை பாய்ந்தால் ரொம்ப அசிங்கமாயிடும்… அதனால், ‘வலுவாக’ கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆயிடுங்கனு ஐடியாவும் கொடுப்பாராம். மேலிடத்தில் இருந்து நெருக்கடி வந்தால் மட்டும் நாங்களே கூப்பிடுகிறோம். இல்லாவிட்டால் அப்டியே விட்டுடலாம் என ஆறுதல் சொல்லி அனுப்புகிறாராம். கம்ளையின்ட் பார்ட்டி, அக்யூஸ்ட் பார்ட்டி என இரண்டு தரப்புலயும் வாங்கின தொகையை சீர் தூக்கி பார்த்து, அதற்கு தகுந்தபடி விசுவாசமாக சாய்ந்து விடுவாராம். லஞ்ச பணத்தில் நகை வாங்கி குவித்து ராணியாக வலம் வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா….
The post தேனியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர மாஜி அமைச்சரை களம் இறக்கியுள்ள நபரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.