×

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை

திருவாரூர், செப். 7: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயிலின் உச்சம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டுமே காணப்படும். ஆனால், நடப்பாண்டில் தற்போது செப்டம்பர் மாதம் ெதாடங்கியும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்திலும் தினமும் 90 முதல் 95 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக பொது மக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். பணி நிமித்தமாக செல்வோர் குடை பிடித்தவாறும், பெண்கள் தங்களது புடவை மற்றும் துப்பட்டாவால் தலையை மூடியவாறும், வயதான ஆண்கள் தங்களது துண்டால் தலையை மூடியவாறும் வெளியில் சென்று வருகின்றனர்.

அக்னி நட்சத்திர நாள்களை விட வெயில் மிகவும் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட 5 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்களுக்கு கர்நாடகா அரசிடமிருந்து உரிய நீர் கிடைக்காததன் காரணமாக, மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகும் அபாயம் இருந்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்றும் காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. இரவு 9 மணியளவில் திருவாரூர், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் வரை மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக குறுவை பயிர்களுக்கு நீர் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை appeared first on Dinakaran.

Tags : Tiruvarur district ,Tiruvarur ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் 18 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்