செங்கல்பட்டு மருத்துவமனை தூய்மை பணிப்பெண்கள் பாலியல் பலாத்காரம் தனியார் நிறுவன மேலாளர் கைது: 3 பேருக்கு வலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பெண் பணியாளர்களை உல்லாசத்திற்கு அழைப்பதும், ஆசைக்கு இணங்காத பெண்களை வேலையை விட்டு நீக்குவதுமாக இருந்த அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் தனியார் ஒப்பந்த நிறுவன மேலாளர் கபில் என்பவர்மீது அடுக்கடுக்கான புகார் அளிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில், வார்டுகளை சுத்தம் செய்வதற்காகவும், பாதுகாப்பு பணிகளுக்காகவும் இயங்கி வரும் மும்பையை சேர்ந்த கிரிஸ்டல் என்கிற தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 290 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். கிரிஸ்டல் நிறுவனத்தின் செங்கல்பட்டு மருத்துவமனை மேலாளராக கபில் என்பவர் பணியாற்றி வருகிறார்.கடந்த 20ம் தேதி காலை 6 மணிக்கு திருமணமான பெண் ஒருவர் பணிக்கு செல்ல சென்னையில் இருந்து செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் வந்து, பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மேலாளர் கபில் அந்த பெண்ணை தனது இருசக்கர வாகனத்தில் ஏறுமாறும், வேலைக்கு செல்ல தேவையில்லை நாம் இருவரும் எங்கேயாவது சென்று சந்தோஷமாக இருந்துவிட்டு வரலாம் என கூறியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த அப்பெண் ஷேர் ஆட்டோவில் ஏறி அரசு மருத்துவமனைக்கு பணிக்கு சென்றுவிட்டார்.  மேலும், இச்சம்பவம் குறித்து மேலாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு நிலைய மருத்துவ அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சிலர் துணைபோய் இருப்பது தெரியவந்தது. மேலும், கபில் மீது நிலைய மருத்துவ அதிகாரியிடம் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வலியுறுத்தி, அந்த பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த செல்லா, தமிழ்ச்செல்வி அவரது அம்மா மற்றும் மேலாளர் கபில் மீது செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். இதுபற்றி கேள்விப்பட்ட கபில் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட மூன்று பெண்கள் உள்பட நான்கு பேரும் கடந்த 15 நாட்களாக தலைமறைவாகி விட்டனர். இந்த நால்வரையும் தீவிரமாக தேடிவந்த போலீசார் சென்னை பெரம்பூரில் அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த கபிலை  பிடித்து, அவரை பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கபிலுக்கு ஆதரவாக செயல்பட்டு தலைமறைவாக உள்ள மூன்று பெண்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்….

The post செங்கல்பட்டு மருத்துவமனை தூய்மை பணிப்பெண்கள் பாலியல் பலாத்காரம் தனியார் நிறுவன மேலாளர் கைது: 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: