குடிநீரை நன்கு காய்ச்சிய பிறகு குடியுங்கள் பொதுமக்களுக்கு பழநி நகராட்சி அறிவுரை

 

பழநி, டிச. 25: பொதுமக்கள் குடிநீரை நன்கு கொதிக்க வைத்து உபயோகிக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி நகருக்கு கொடைக்கானல் சாலையில் உள்ள கோடைகால நீர்த்தேக்கத்தில் இருந்தும், பாலசமுத்திரத்தில் உள்ள பாலாறு அணையில் இருந்தும் குடிநீர் பெறப்படுகிறது. நகராட்சி சார்பில் குடிநீரின் தரத்தினை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குடிநீர் விநியோக திட்டத்தின் கீழ் 6 மேல்நிலை தொட்டிகள், பாலாறு-பொருந்தலாறு மற்றும் கோடைகால நீர்த்தேக்க சுத்தகரிப்பு நிலைய பிரதானக்குழாய் மற்றும் குடிநீர் விநியோகிக்கும் அனைத்து குழாய்களிலும் உடனடியாக சுத்தம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகராட்சியில் குடிநீர் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் பிளிச்சிங் பவுடர் ஐ.எஸ்.ஐ தரம் உள்ளதாகவும் 32% குளோரின் அளவு கண்டிப்பாக உள்ளதா என நகராட்சி அலுவலர்களால் கண்காணிக்கப்பட்ட பின்னரே பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

குடிநீர் விநியோகத்தின் கடைசி பகுதியை குறைந்தபட்ச குளோரின் அளவான 0.2 பி.பி.எம். இருக்குமாறு குளோரினேசன் செய்யப்படுகிறது. மேலும் தற்போது சூப்பர் குளோரினேசனும் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வயிற்றுபோக்கு, வாந்திபேதி, காய்ச்சல் போன்ற குடிநீர் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படாமல் இருக்க தண்ணீரை கொதிக்க வைத்து உபயோகிக்க வேண்டுமென பழநி நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post குடிநீரை நன்கு காய்ச்சிய பிறகு குடியுங்கள் பொதுமக்களுக்கு பழநி நகராட்சி அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: