அரசியல் தலையீடு இன்றி லஞ்ச ஒழிப்பு துறை சுதந்திரமாக செயல்படுகிறதா?: தமிழக அரசு பதிலளித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!!!

சென்னை: தமிழக லஞச் ஒழிப்புத்துறை அரசியல் கட்சிகளிடம் இருந்து விலகி சுதந்திரமாக செயல்படுகிறதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு சென்னை வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத ரூ.70,060 பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, வில்லிவாக்கம் சார்பதிவாளர் கோபால கிருஷ்ணன் தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார்.

ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு லஞ்ச புகாரில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சார்பதிவாளர் கோபால கிருஷ்ணன் செங்கல்பட்டு சார்பதிவாளராக தமிழக அரசு மாற்றம் செய்தது. எனவே, இந்த நடவடிக்கை சட்டவிதிகளுக்கு புறம்பானது என்றும் லஞ்சம் பெற்று இந்த இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், இடமாற்றம் செய்யப்பட்ட அரசாணை ரத்து செய்ய வேண்டும் என்று கருப்பு எழுத்து கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊழல் எனும் புற்றுநோய் நம்மை கொல்கிறது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், ஊழல் காரணமாக நிலஅபகரிப்பு நடப்பதாகவும், நீர் நிலையங்கள் மாயமாவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், தமிழக லஞ்ச ஒழிப்பு துறை எப்படி செயல்படுகிறது?அரசியல் கட்சிகளிடம் இருந்து விலகி, எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படுகிறதா? கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளை கையாண்டுள்ளது? என்பன குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: