ஊத்துக்கோட்டை அருகே சிட்ரபாக்கம் தடுப்பணை நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி

ஊத்துக்கோட்டை, செப். 14: கடந்த சில நாட்களாக பெய்த மழை மற்றும் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி திறக்கப்பட்டதால் ஊத்துக்கோட்டை சிட்ரபாக்கம் தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. நீர்நிலை உயர்வால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் கிராமத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழைக் காலங்களில் மழைநீர் நிரம்பியதும் தண்ணீர் திறக்கப்பட்டால், இந்த தண்ணீர் நாகலாபுரம், சுருட்டபள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக சென்று பழவேற்காடு கடலில் கலக்கும்.

இவ்வாறு வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்க ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள சிட்ரபாக்கத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என ஊத்துக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான சிட்ரபாக்கம், அனந்தேரி, போந்தவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நெல், கரும்பு, பூ செடிகள் என பல பயிர்கள் வைத்துள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி கடந்த 1989ம் ஆண்டு சிட்ரபாக்கம் பகுதியில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகளும் பயனடைந்தனர். நாளடைவில் இந்த தடுப்பணை மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்தது. இதை சீரமைக்க மக்கள் கோரிக்கை வைத்தனர். பின்னர் கடந்த 2014-2015ம் ஆண்டு ₹3.42 கோடி செலவில் சிட்ரபாக்கம் பகுதியில் தடுப்பணையையும், கரைகளையும் பொதுப்பணித்துறையினர் புதுப்பித்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊத்துக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழையாலும், ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி திறக்கப்பட்டதாலும், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அடங்கிய சிட்ரபாக்கம் தடுப்பணையும் நிரம்பியது. இதனால் இந்த ஆண்டு கோடை காலத்தில் ஊத்துக்கோட்டை, அனந்தேரி போன்ற பகுதிகளுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என தெரிகிறது. இதனால் ஊத்துக்கோட்டையை சுற்றியுள்ள கிராம மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post ஊத்துக்கோட்டை அருகே சிட்ரபாக்கம் தடுப்பணை நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: