அரசு வேலை தருவதாக ரூ.4.55 லட்சம் மோசடி

 

கோவை, அக்.4: கோவையில் அரசு வேலை தருவதாக ரூ.4.55 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கோவை சுந்தராபுரம் மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (25). மரக்கடை நடத்தி வந்த இவர் அரசு வேலை தேடி வந்தார். இந்த நிலையில் இவருக்கு விஜயகுமார், வீரகுமார், டேவிட் மதி உள்பட சிலரின் அறிமுகம் ஏற்பட்டது. இவர்கள் அரசு துறையில் உதவியாளர் பணியிடம் பெற்று தருவதாக கூறினர். தினேஷ்குமாரிடம் பத்திரப்பதிவு துறையில் உதவியாளர் பணியிடம் வாங்கி தருவதாக கூறினர். கடந்த ஏப்ரல் மாதம் சென்னைக்கு வீரகுமார் வரவழைத்தார்.

அங்கே தினேஷ்குமாரின் கல்வி சான்றுகளை சரி பார்த்தனர். பின்னர் அவரிடம் 2 லட்ச ரூபாய் வாங்கினர். பின்னர், பல்வேறு கட்டங்களில் ஆன்லைன் மூலமாக 2.55 லட்ச ரூபாய் பெற்றனர். பீளமேடு சார் பதிவாளர் அலுவலகத்தில் வேலை கிடைத்துவிட்டது என அழைத்து பணி நியமன கடிதம் தந்தனர். அங்கே சென்றபோது அது போலியான பணி நியமன ஆணை என தெரியவந்தது. இது தொடர்பாக தினேஷ்குமார் விசாரித்தபோது 3 பேரும் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட விவரம் தெரியவந்தது. இது குறித்து அவர் சுந்தராபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

The post அரசு வேலை தருவதாக ரூ.4.55 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Related Stories: