ஹூஸ்டன்: பிபா உலக கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப் 16 போட்டியில் கனடா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற மொராக்கோ முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறியது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த இப்போட்டியில், மொராக்கோ அணி தொடக்கம் முதலே ஒருங்கிணைந்து விளையாடி ஆதிக்கம் செலுத்தினாலும் கனடா தற்காப்பு அரணை தகர்க்க முடியாததால் முதல் பாதி முடிவில் 0-0 என சமநிலை நிலவியது. இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்த ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் அஸ்ஸெடின் அவுனாஹி அற்புதமாக கோல் அடித்து அந்த அணிக்கு 1-0 என முன்னிலை கொடுத்தார்.
மொராக்கோ அலை அலையாக தாக்குதல் தொடுத்தாலும், கனடா கோல் கீப்பர் கொஞ்சமும் சளைக்காமல் பல ஷாட்களை தடுத்து வெளியேற்றினார். எனினும், 82வது நிமிடத்தில் அவுனாஹி மீண்டும் ஒரு கோல் அடிக்க மொராக்கோ 2-0 என முன்னிலையை அதிகரித்தது. இன்ஜுரி டைமில் சூபியேன் ரஹிமி (90’+8’) ஒரு கோல் அடிக்க, மொராக்கோ 3-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வென்று முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறியது. போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான கனடா, ஆறுதல் கோல் கூட அடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியது.
ஆப்ரிக்க அணிகளில் முதலிடம்
- கத்தார் 2022 உலக கோப்பையை தொடர்ந்து, நடப்பு தொடரிலும் காலிறுதிக்கு முன்னேறியுள்ள மொராக்கோ அணி, இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் ஆப்ரிக்க அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.
- 2022 கத்தார் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையும் மொராக்கோ அணிக்கே கிடைத்தது.
- அவுனாஹி கோல் அடித்த 8 போட்டியில் மொராக்கோ அணி வெற்றியை வசமாக்கி உள்ளது.
