காக்கை தலையில் தட்டினால் என்ன சகுனம்? என்ற கேள்விக்கு தேஜஸ்வி அளித்த பதிலில், “இன்னும் சற்று கவனமாக இருங்கள் எனும் ஒரு எச்சரிக்கையாக கருதலாம்’’ என்றதும் இன்று வழிபாட்டின் மூலமே வளர்ச்சி காண வேண்டிய ராசிகள் என அதையும் நேர்மறையாகச் சொல்லும் விதம் நினைவிற்கு வந்தது.
– ஸ்ரீ காந்த், பிச்சாண்டார் கோயில், திருச்சி.
கருணையின் திறவுகோல் என்று பொறுப்பாசிரியர் தந்துள்ள தலையங்கம் படித்தேன். சபரியின் பக்தி மற்றும் அன்பை உதாரணமாக்கி, ஒருத்தருக் கொருத்தர் அன்பும் கருணையும் செலுத்தினால், அதுவே மோட்ச வழி என்பது புரிகிறது!
– ஆர்.விநாயகராமன், நெல்லை.
சனிஸ்வரனையே பயமுறுத்தி ஆட்கொண்ட பெரிய அனுமன் திருக்கோயிலின் சிறப்புக்கள் மிகவும் அருமை! அதுவும், சனீஸ்வரனிடம் சஞ்சீவி ராயன் நடத்திய லீலைகளை விவரித்த போது ஒரு சிறிய திரைப்படம் பார்த்த மகிழ்வை ஏற்படுத்தி, அந்த அனுமன் ஆலயத்தை தரிசிக்க வேண்டும் என்ற அவாவை ஏற்படுத்திவிட்டது. மேலும், யோகினிகளில் முதன்மை பெற்று விளங்கும் மார்கினி தேவி, கதி கலங்கி இருப்பவர்களுக்கு நல்வழி காட்டி அருளுகின்ற அற்புதத்தையும், மகத்துவங்களையும் விளக்கிய கட்டுரை பிரமிக்க வைத்து விட்டது.
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.
பி.என்.பரசுராமன் எழுதிய “பக்தனுக்காக பகவானே செய்த நீத்தார்கடன்’’ என்னும் தொகுப்பு மிக நேர்த்தியாக இருந்தது. நரசிம்ம மேத்தா என்னும் மகானைப் பற்றி தெரிந்துக்கொள்ள அருள் தரும் ஆன்மிகம் உதவியது. பகவானே… நரசிம்ம மேத்தாவிற்காக நீத்தார் கடனை செய்தார் என்னும் வரியை படிக்கும் போது, என் உடல் சிலிர்த்துக்கொண்டது. இத்தகைய மகான்களை பற்றி தெரிந்துக்கொள்ள உதவிய அருள் தரும் ஆன்மிகம் இதழுக்கு நன்றி.
– ராஜராஜன், ஸ்ரீ வில்லிப்புத்தூர்.
முகப்பு அட்டையில் வண்ண மயிலுடன் அழகன் முருகன். வைகாசி விசாகம், நம்மாழ்வார் அவதார தினம் குறித்து அறியப்படாத தகவல்கள், சென்னையில் ஒரு அதிசய கங்கை, இணைப்பாக வைகாசி மாத ராசி பலன்கள், குரு பெயர்ச்சி பலன்கள் என கலக்கிட்டீங்க!
– ஆர்.கே.லிங்கேசன்,மேலகிருஷ்ணன்புதூர்.
பிரதோஷத்தில் பிரார்த்தித்தால் பெறாதது இல்லை என்ற குடந்தை நடேசன் அவர்களின் தொகுப்பு, 16 வகையான பிரதோஷ மகிமைகளை பொருள்பட எடுத்துரைத்திருந்தது. அதிகரித்து வரும் பிரதோஷ வழிபாட்டினை மென்மேலும் இத்தொகுப்பு அதிகரிக்கச் செய்வது உறுதி.
– இரா.வளையாபதி,தோட்டக்குறிச்சி.
பிரதோஷ காலத்தில் ஏன் பிராத்தனை செய்ய வேண்டும் போன்ற விவரங்கள், கந்தன்குடி கந்தவேளின் மகத்துவம், களங்கமற்ற அன்பையும், தூய்மையான கருணையுமே இறைவன் மனிதனிடம் எதிர்பார்ப்பது போன்ற தகவல்கள் என வைகாசி விசாகச் சிறப்பிதழ் பெரிதும் எங்களை ஆகர்ஷித்தது.
– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
“ஹோய்சாளக் கட்டடக்கலையின் உன்னதப் படைப்பு’’ என்ற சிற்பமும் சிறப்பும் பகுதி, ஆறு பக்கப் பதிவாகி ஆன்மிக எழுச்சியை தருகிறது. வரலாற்று பின்னணியும் வடிவங்களும் வெகு அருமை!
– எஸ்.எல்.ஜார்ஜ் அருண், தூத்துக்குடி.
சொன்னதைக் கேட்போம் துயரம் விலகிப்போம் என்ற கட்டுரை, ஒரே பக்கமாக இருந்தாலும், `நச்’ என்று சொல்லவந்த கருத்துக்களை சொல்லிவிட்டு சென்றது. குறிப்பாக, “மா மகிட சூரன் மணிமுடிய….’’ என்னும் தொடங்கும் சிவதாசரின் பாடல் மிக அருமை! பாராட்டுக்கள்.
– சிவக்குமார், ராமேஸ்வரம்.
