டெல்லி: மத்தியப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தலில் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்தியப் பிரதேசத்தில் நடைபெற இருந்த மாநிலங்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், மீனாட்சி நடராஜன் தனது வேட்புமனுவில் அவர் மீது நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டதைக் குறிப்பிடவில்லை என்று பாஜக வேட்பாளர் மகேஷ் கேவத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக விசாரித்த தேர்தல் ஆணையம் மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை நிராகரித்தது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தன்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார் மீனாட்சி நடராஜன். இதையடுத்து, வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாளான நேற்று களத்தில் பாஜக வேட்பாளர்கள் மூன்று பேர் மட்டுமே இருந்ததால், அவர்கள் மூவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில், மீனாட்சி நடராஜனின் மனுவை நீதிபதி பிரஷாந்த் குமார் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஏ.எஸ். சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதைத்தொடர்ந்து. அரசியலமைப்புச் சட்டத்தின் 329-வது பிரிவின்கீழ் உள்ள தடையைக் காரணம் காட்டி, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
