சென்னையில் நேற்று நடந்த ‘அதிரடி’ என்ற படத்தின் நிகழ்ச்சி, சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைந்தது. அருண் அனிருத்தன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், ரியா ஷிபு நடிப்பில் கடந்த 14ம் தேதி ‘அதிரடி’ என்ற மலையாள படம் வெளியானது. இதன் தமிழ் டப்பிங், அதே பெயரில் வரும் 22ம் தேதி திரைக்கு வருகிறது. நிகழ்ச்சியில் பேசிய சஞ்சு சாம்சன், ‘சினிமா புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது புதிய அனுபவம். எனது நண்பர் பசில் ஜோசப் அழைத்ததால் வந்தேன்’ என்ற அவரிடம், ‘பசில் ஜோசப் படத்தில் நடிக்க அழைத்தபோது ஏன் மறுத்தீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சஞ்சு சாம்சன், ‘அவன் எனக்கு சின்ன கேரக்டர் கொடுத்தான்.
எனக்கு பெரிய கதாபாத்திரம் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன். நேரில் ரொம்பவும் சாதாரணமாக இருக்கும் பசில் ஜோசப், வேலை என்று வந்துவிட்டால் மிகவும் கண்டிப்பான நபர். ஒரு வாரத்துக்கு முன்பே தனக்கான விஷயங்களை திட்டமிடும் அளவுக்கு பிசியான ஒரு இயக்குனர்’ என்றார். பிறகு பேசிய பசில் ஜோசப், ‘இப்படத்தின் வசனங்களை தமிழ் கலாசாரத்துக்கு ஏற்ப, எழுத்தாளர் நெல்லியன் என்பவரை வைத்து மாற்றி எழுதியுள்ளோம். தமிழ் ரசிகர்களுக்காக பல ரெஃபரன்ஸ் பாடல்களையும் பயன்படுத்தி இருக்கிறோம். எனக்கு எப்போதுமே டைரக்ஷன்தான் முன்னுரிமை. இயக்குவது என்பது, ஓட்டுநர் இருக்கையில் உட்கார்ந்து வண்டி ஓட்டுவது போன்றது. நடிப்பது என்பது, சீட்டில் அமர்ந்து பயணிப்பது போன்றது. நான் நடித்துள்ள ‘ராவடி’ என்ற நேரடி தமிழ் படம் அடுத்த மாதம் வெளியாகிறது’ என்றார்.
