கெய்ரோ: அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த சில வாரங்களாக சண்டை ஓய்ந்திருந்தாலும், இருதரப்பிலும் இன்னும் போர் நிறுத்தம் ஏற்படாததால் பதற்றம் தணியவில்லை. ஈரான் தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதியின்றி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஓமனின் லிமாவிலிருந்து 11 கடல் மைல் தொலைவில் எண்ணெய் கப்பல் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், கப்பலின் இன்ஜின் அறை சேதமடைந்தது.
இதே போல, கசாப் நகருக்கு 21 கடல் மைல் தொலைவில் மற்றொரு எண்ணெய் கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த 2 சம்பவத்திலும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதவிர, குவைத்தை குறிவைத்து ஈரான் ஏவிய டிரோன்கள் நேற்று நடுவானில் அழிக்கப்பட்டன. அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் எண்ணெய் கட்டமைப்புகளை ஈரான் குறிவைத்து வருவதால் மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், அமைச்சரவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் மீது மேலும் தாக்குதல் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் போரில் வெற்றி பெறவே விரும்புகிறோம். அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை இன்னும் சில காலத்திற்கு தொடரும். ஈரானால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அதன் மீது மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும்’’ என்றார்.
