வடக்குகோடைமேலழகியான் கால்வாயில் சுத்தப்படுத்தும் பணி நிறைவு 17 பாலங்களின் அடியில் தேங்கிய 25 டன் கழிவுகள் அகற்றம்

*தன்னார்வலர்கள் நடவடிக்கை

விகேபுரம் : வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் சுத்தப்படுத்தும் பணி நேற்றுடன் நிறைவுபெற்ற நிலையில் தண்ணீர் செல்ல தடை ஏற்படுத்திய 17 பாலங்களின் அடியில் தேங்கியிருந்த 25 டன் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.

பாபநாசம் அணையில் இருந்து வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் அனவன்குடியிருப்பு, டாணா, விகேபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், அம்பை வழியாக கடைமடை வரை சென்று சேருவதில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இதற்கு கால்வாயில் அமலை செடிகள் ஆக்கிரமித்து இருப்பதாலும், குப்பைகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளால் தண்ணீர் தங்கு தடையின்றி செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் 33 பாலங்கள் உள்ளது. இந்த பாலங்களுக்கு அடியில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், அமலை செடிகளின் ஆக்கிரமிப்பால் தண்ணீர் செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து சமூக ஆர்வலர் மூர்த்தி தலைமையில் மாரி, முருகன், பிரதாப், விஜய், ஆண்டனி, மூர்த்தி, சுதர்சன் ஆகியோர் விகேபுரம் முதல் கோடாரங்குளம் வரை வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் தண்ணீர் தங்கு செல்ல ஏதுவாக அமலை செடிகள், பாட்டில்கள், பிளாஸ்டிக்கழிவுகள், இறைச்சி கழிவுகள், குப்பை கழிவுகள் மற்றும் இதர கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இறுதி நாளான நேற்று கோடாரங்குளம் பகுதியில் வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் பாலங்களுக்கு அடியில் நீரின் போக்கை தடுத்த 4.5 டன் கழிவுகள் அகற்றப்பட்டது. விகேபுரம் முதல் கோடாரங்குளம் வரை 17 பாலங்களில் அடியில் தேங்கி இருந்த 25 டன் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. நேற்றுடன் இப்பணி முடிவடைந்ததால் வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் கழிவுகளை அகற்றுவதற்கு உதவிய நல் உள்ளங்களுக்கு கிரிக்கெட் மூர்த்தி நன்றி தெரிவித்தார்.

Related Stories: