திருவள்ளூர், ஜூலை 24: திருவள்ளூர் அருகே அசாம் மாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், போளிவாக்கம் சத்திரத்தில் தனியார் கம்பெனி ஒன்று உள்ளது. இந்த, தொழிற்சாலையில் அசாம் மாநிலம், கம்பூர் மாவட்டம் பாராப்பதிரா, சிம்லாய் பாதர் பகுதியை சேர்ந்த தவ்ஹீத் உசேன் (19) என்பவர் தங்கி போர்க்லிப்ட் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக தவ்ஹீத் உசேன், அடிக்கடி தலைவலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு கடும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த அவர், தான் தங்கியிருந்த அறைக்கு சென்று யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைகண்ட சக தொழிலாளர்கள், இதுகுறித்து மணவாளநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப் இன்ஸ்பெக்டர் கோபி கிருஷ்ணா, தொழிலாளி தவ்ஹீத் உசேனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப் பதிவு செய்து, தொழிலாளியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
