ஆலய தேர்பவனி திருவிழாவில் பட்டாசு வெடித்து பயங்கர விபத்து: 15 பேர் படுகாயம்: 3 பேர் சீரியஸ்

நிலக்கோட்டை: ஆலய தேர்பவனி திருவிழாவில் பட்டாசு வெடித்த விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், 3 பேர் சீரியஸாக உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம்ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், செம்பட்டி அருகே, வக்கம்பட்டி கிராமத்தில் உள்ள புனித மரிய மதலேனாள் ஆலயத்தின் 171வது ஆண்டு ஆடிப்பெருவிழா, கடந்த 18ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான மின்ரத தேர்ப்பவனி நேற்றிரவு 12 மணியளவில் தொடங்கியது. தேர்ப்பவனியை வரவேற்பதற்காக ஆலயத்தின் முன் பட்டாசு வெடித்து வாணவேடிக்கை நிகழ்த்தினர். இதில், பறந்த தீப்பொறிகள் அருகில் மொத்தமாக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளின் மேல் விழுந்து, அனைத்து பட்டாசுகளும் ஒரே நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி பொதுமக்கள் கூட்டத்தில் விழுந்தன. இதனால், அனைவரும் அலறியடித்து ஓடினர்.

இந்த பட்டாசு வெடித்து சிதறியதில் கூட்டத்தில் இருந்த சபரிநாதன், கரண், வில்சன், மரிய லியோன் ராஜ், ஆரோக்கியசாமி, ராபின் அருள்ராஜ், லோகேஷ், மரியநிஷா, ஜான்ஸி தோனியா, மரிய ஜாக்குலின் என 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 3 பேர் நிலை சீரியஸாக உள்ளதாக தெரிகிறது.இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: