சனா: அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சவூதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் செங்கடல் நீர்வழியை மூடிவிட்டதாக ஏமனின் ஹவுதி அமைப்பினர் அறிவித்திருப்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இடையில் கொஞ்ச நாள் ஓய்ந்திருந்த போர் சூழல் கடந்த 10 நாட்களாக அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து ஈரான் மீது தொடர்ச்சியாக அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த அதிரடி தாக்குதல் நடவடிக்கையானது வான் பாதுகாப்பு அமைப்புகள், ஆயுத கிடங்குகள் மற்றும் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளை குறி வைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்க படைகளுக்கு அடைக்கலம் தரும் அண்டை நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான், ட்ரோன் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அதே போல் அமெரிக்காவிற்கு, சவூதி அரேபியா உதவி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்கான செங்கடல் பகுதியில், உலகின் மிக முக்கிய வர்த்தக பாதையான bab el mandeb நீரிணையை மூடுவதாக ஹவுதி அமைப்பு அறிவித்துள்ளது. இதனால் சர்வ்தேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் பாப் அல்-மந்தேப் ஆகிய இரண்டு முக்கிய உலகளாவிய கடல் பாதைகளும் முடக்கப்பட்டால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு, உலகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதனிடையே செங்கடல் வழியை மூடினாள் தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து உள்ளார். அதே போல ஈரான் மீது இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
