* நீண்ட காலமாக போராடியும் பலனில்லாததால் மக்கள் அதிருப்தி
* சேறும் சகதியுமான சாலையில் உடல்களை கொண்டு செல்லும் அவலம்
கடையம் : தென்காசி மாவட்டம் கடையம் அருகே அடைச்சாணி ஊராட்சியில் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அடைச்சாணி பெரியகுளம் கரை வழியாக சுடுகாட்டை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் குளக்கரை சேறும் சகதியுமாக மாறி, பள்ளங்கள் உருவாகி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால், சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் உடனடியாக சாலை அமைக்க வேண்டும் மற்றும் தாம்போதி பகுதியில் பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை தொடர்ந்து வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
சாலையின் அளவு குறித்தும் குறிப்பெடுத்து கொண்ட அவர்கள், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால், இதுவரை எந்த ஒரு பணியும் தொடங்கப்படாததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் இப்பகுதி சேறும் சகதியுமாக மாறி விடும். அதன்பிறகு இறந்த உடல்களை தட்டு தடுமாறி தான் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே மழைகாலம் தொடங்குவதற்கு முன்பாக சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.
பெயரளவுக்கு ஆய்வு செய்ததாக மக்கள் குற்றச்சாட்டு
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘மழைக்காலம் நெருங்கும் நிலையில் சுடுகாட்டுப் பாதை முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இறப்பு ஏற்பட்டால் கூட சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது சம்பந்தமாக பஞ்சாயத்து தலைவர் மதியழகன் பலமுறை மனு அளித்தார்.
அதன்பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சாலை அமைப்பதாக உறுதி அளித்தனர். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை அமைத்து, தாம்போதி பாலத்தை கட்டி முடிக்க வேண்டும். இப்பிரச்னைக்கு தொடர்புடைய அதிகாரிகள் விரைவில் தீர்வு காண வேண்டும்’ என்றார்.
