தென்பெண்ணையாற்று பகுதியில் புதினா விளைச்சல் அமோகம் விற்பனைக்கு அனுப்பும் பணி தீவிரம்

ராயக்கோட்டை, ஜூலை 21: இதமான சீதோஷ்ண நிலையால், ராயக்கோட்டை தென்பெண்ணையாற்று பகுதியில், புதினா விளைச்சல் அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே, தென்பெண்ணை ஆற்றங்கரையையொட்டி தற்போது விவசாயிகள் புதினா சாகுபடி மேற்கொண்டுள்ளனர். நன்கு விளைந்த புதினாவை பறிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். புதினா மற்றும் கொத்தமல்லியை விற்பனை செய்ய தனியாக மார்க்கெட்டுகள் உத்தனப்பள்ளி மற்றும் சூளகிரியில் உள்ளது. மாலை 6 மணிக்கு தொடங்கும் மார்க்கெட்டுகள் இரவு 12 மணி வரை நடைபெறுகிறது. விவசாயிகள் விளைச்சல் செய்த புதினா, கொத்தமல்லியை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

புதினா மற்றும் கொத்தமல்லியை கோவை, திருச்சி, சேலம், மதுரை, சென்னை போன்ற நகரங்களுக்கும், ஐதராபாத் போன்ற அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், `கடந்த 6 மாதங்களுக்கு முன் பயிரிடப்பட்ட புதினா, தற்போது நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. சில இடங்களில் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் கொத்தமல்லி அறுவடை பணி மேற்கொள்ள உள்ளோம். மார்க்கெட்டில் விலை சீராக கிடைத்து வருகிறது,’ என்றனர்.

Related Stories: