போச்சம்பள்ளி, ஜூலை 23: போச்சம்பள்ளி பகுதியில் டூவீலர் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த வாரம் இரவு வீட்டின் வெளியே தனது டூவீலரை நிறுத்தி விட்டு சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது டூவீலர் திருடு போயிருந்தது. இதுகுறித்து மகேந்திரன் அளித்த புகாரின் பேரில், போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வந்தனர். இதற்கிடையில், ஊத்தங்கரையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், சந்தேகத்திற்கிடமாக 3 பேர் தங்கியிருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், உடனடியாக அங்கு சென்ற போலீசார், விடுதியில் தங்கியிருந்த 3 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் மகேந்திரனின் டூவீலரை திருடியதும், பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியதும் தெரிய வந்தது. தொடர் விசாரணையில், அவர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்(26), ஊத்தங்கரையைச் சேர்ந்த மணிமாறன்(26), சீனி(24) என்பது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 2 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களை போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர்.
