டாக்கா: வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். வங்கதேசத்தில் பருவ மழை தீவிரம் அடைந்து கடந்த 5ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த நாட்டில் உள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி ஓடுகின்றது.தலைநகர் டாக்காவில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பெய்த 76 மி.மீ கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, இயல்பு வாழ்க்கை முடங்கியது.
7 மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடற்படை மற்றும் விமானப்படையுடன் ராணுவ வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,67,918 பேர் தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். காக்ஸ் பஜாரில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 16 பேர் பலியாகினர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் மொத்தம் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
