டொராண்டோ சல்சா திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி, 6 பேர் காயம்!

கனடாவின் டொராண்டோ நகரில் ஆண்டுதோறும் ‘சல்சா ஆன் செயின்ட் கிளேர்’ தெருத் திருவிழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 22-வது ஆண்டாக நடைபெற்ற இந்த திருவிழாவின் முதல் நாளில், குழந்தைகள், பெரியவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இசையையும் நடனத்தையும் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென துப்பாக்கி முழங்கும் சத்தம் கேட்டது.

இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், அவர்கள் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். இதனால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. துப்பாக்கிசூடு சத்தம் கேட்டு மக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இந்த சம்பவத்தில் குண்டுபாய்ந்து சம்பவ இடத்திலேயே ஒருவரும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மற்றொருவருமாக மொத்தம் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், ஆறு பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த டொராண்டோ அதிரடிப்படை போலீசார், ஒரு மணி நேரத் தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு ஒட்டுமொத்தப் பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவ இடத்திலிருந்து இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: