உணவகத்தில் அதிகாரிகள் சோதனை தரமற்ற 42 கிலோ சிக்கன் அழிப்பு: உரிமையாளர்களுக்கு அபராதம்

 

திருவொற்றியூர், ஜூலை 10: திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளில் தரம் குறித்து, திருவெற்றியூர் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் தீபா, மாதவரம் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் கார்மேகம், மீஞ்சூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் மற்றும் புழல் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

குறிப்பாக, திருவொற்றியூர் சுங்கச்சாவடி, தேரடி மற்றும் அஜாக்ஸ் பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் டீ கடை, பாஸ்புட் கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை சோதனை செய்தபோது பல பாஸ்ட்புட் கடைகளில் ரசாயனம் கலந்த சிக்கன் மற்றும் துரித உணவுகள் தயாரிக்கப்பட்டது தெரிந்தது. இதையடுத்து சுமார் 42 கிலோ சிக்கனை பறிமுதல் செய்து அழித்தனர். பின்னர் தரமற்ற உணவுகளை தயாரித்த 6 கடை உரிமையாளர்களுக்கு தலா 18 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர். 8 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் பிரிவு 55 மற்றும் பிரிவு 63ன் கீழ் தரமற்ற உணவுகளை தயாரிக்கக் கூடாது, உணவகங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளை பார்சல் செய்வதற்கு பயன்படுத்த கூடாது, செயற்கை வண்ணங்கள் சிக்கன் வகைகளில் பயன்படுத்த கூடாது என எச்சரித்தனர்.

Related Stories: