இம்பால்: மணிப்பூரில் துணைராணுவப்படை வாகன அணிவகுப்பில் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் பலியானார்கள். மணிப்பூர் மாநிலம் தொடர் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு அமைதியை ஏற்படுத்த துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் உக்ருல் மாவட்டத்தில் மலைப்பகுதியான நுங்ஷாங் கோங் என்ற இடத்தின் வழியாக துணை ராணுவப்படை வீரர்கள் வந்த வாகன அணிவகுப்பு சென்று கொண்டு இருந்தது.
அப்போது தீவிரவாத கும்பல் அந்த அணி வகுப்பு மீது திடீர் தாக்குதல் நடத்தியது. துணை ராணுவ வீரர்கள் வந்த வாகனங்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்த திடீர் தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர்; மேலும் பலர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாதுகாப்புப் படையினர் மீதான இந்தத் தாக்குதலை மாநில உள்துறை அமைச்சர் கோவிந்தாஸ் கோன்தோஜம் கண்டித்தார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,’ தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய பாதுகாப்புப் படையினர் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள்’ என்றார்.
