×

காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது; மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:
தெற்கு குஜராத்திலிருந்து கேரளம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. நேற்று முன்தினம் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா-மேற்குவங்க கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிசா கடலோரத்தில் சந்த்பாலி மற்றும் பாலசோர்க்கு அருகில் உள்ள திகாவிர்க்கு இடையே கரையை கடக்கக்கூடும். இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 24 மணி நேரத்தில் வடக்கு ஒடிசா மற்றும் வடக்கு சட்டீஸ்கர் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 8ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு மிதமான மழை பெய்யக்கூடும்.

Tags : Western Ghats ,Meteorological Department ,Chennai ,Western Ghats districts ,Chennai Meteorological Department ,South Gujarat… ,
× RELATED ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2: 95.94 சதவீதம் பேர் எழுதினர்