சென்னை: எல் நினோ தாக்கத்திலிருந்து தமிழகத்தை காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவெக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு பருவமழைக் காலத்தில் எல் நினோ வானிலை நிகழ்வின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்றும், இதனால் கடுமையான குடிநீர் பற்றாக்குறை மற்றும் உணவு உற்பத்தி பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பது கவலையளிக்கிறது. அந்த விளைவின் காரணமாக வேளாண்மை, நீர் இருப்பு மற்றும் மின்சார தேவையில் ஏற்படக்கூடிய அடுத்தடுத்த பாதிப்புகளை முன்கூட்டியே திட்டமிட்டு தடுக்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள அரசின் கடமையாகும்.
எனவே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோருவது போல, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, எல் நினோ கண்காணிப்பிற்காக ஒரு பிரத்யேகப் பிரிவை அமைத்து, ஓராண்டு காலத்திற்கான விரிவான செயல்திட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும். மேலும், பேரிடர் மேலாண்மை, நீர்வளத்துறை மற்றும் வேளாண்மை துறைகளை ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கிவிடுவதன் மூலம், எல் நினோ பாதிப்பிலிருந்து தமிழக மக்களையும் விவசாயிகளையும் காக்க, தவெக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
