அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் ஆய்வு; ஆளுநர் அர்லேகரின் அத்துமீறிய செயல்: வைகோ, பெ.சண்முகம், ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை ஆய்வு நடத்தியது, கவர்னர் அர்லேகரின் அத்துமீறிய செயல் என்று வைகோ, ெப.சண்முகம் மற்றும் ஜவாஹிருல்லா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்):
ஆளுநர் அர்லேகர், மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரை அழைத்து அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை ஆய்வு நடத்தியது அத்துமீறிய செயலாகும். மேலும் வைகை ஆற்றை சீரமைக்க ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்றும் பேசி இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நிர்வாகத்தில் மூக்கை நுழைப்பது கடும் கண்டனத்துக்குரிய செயலாகும். இனியும் இதுபோன்ற நடவடிக்கைகளை ஆளுநர் தொடர்ந்தால், அவருக்கு எதிராக போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.

பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட மாநில செயலாளர்):
மதுரையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தை ஆர்லேகர் நடத்தியுள்ளார். அவைகை ஆற்றை மதுரை இளைஞர்கள் மீட்டெடுக்க வேண்டும்; அவ்வாறு அவர்கள் செய்யவில்லை என்றால் ஆளுநர் மாளிகையே வைகையை சீரமைக்க களமிறங்கும் என்று பேசி உள்ளார். இது ஆளுநர் பதவிக்கு அழகல்ல, அரசியல் சாசனம் அவருக்கு தந்துள்ள அதிகாரமும் அல்ல. ஆளுநர் தன்னுடைய அரசியல் சாசன விரோதப் போக்கை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இடதுசாரி, ஜனநாயக சக்திகள் களமிறங்கும்.

ஜவாஹிருல்லா (மமக தலைவர்):
தமிழகத்தில் பாஜவின் பின்வாசல் ஆட்சி திட்டத்தின் புதிய முகமாக ஆளுநர் அர்லேகர் செயல்பட தொடங்கியுள்ளார். மாநில உரிமைகளை பாதுகாக்க தவறும் எந்த அரசும், தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தார்மீக உரிமையை இழந்து விடும். தமிழகத்தின் நிர்வாக அதிகாரம் தலைமை செயலகத்தில் இருக்க வேண்டுமே அன்றி, ஆளுநர் மாளிகையில் அல்ல என்பதை நினைவூட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

விஜய் மவுனம்: ஆளுநர் அர்லேகர் ஆய்வு மேற்கொண்டதை அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கண்டித்து வருகின்றனர். ஆனால் தமிழக முதல்வர் விஜய் இதுவரை இதுபற்றி வாயே திறக்கவில்லை.

Related Stories: