சென்னை: காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை கையூட்டு வசூலிக்கப்படுவதும், 2 கிலோ நெல் கூடுதலாக எடுத்துக் கொள்ளப்படுவதும் புதிய அரசிலும் தொடர்வதால் உழவர்கள் வேதனையில் உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரும்பாடுபட்டு சாகுபடி செய்த நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமல் உழவர்கள் வேதனைப்பட்டு வரும் நிலையில், நெல்லை கொள்முதல் செய்வதற்கும் கையூட்டு வசூலித்து அவர்களை சுரண்டுவருவது நியாயமற்றதாகும்.
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் கோடை பருவ அறுவடை தீவிரமடைந்துள்ளது. அறுவடை செய்த நெல்லை விற்பதற்காக அரசு நேரடி
நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் உழவர்கள் பல நாள்கள் காத்திருக்க
வேண்டியிருப்பதுடன், 40 கிலோ எடை கொண்ட நெல் மூட்டைக்கு கையூட்டாக ரூ.40 முதல் ரூ.60 வரை தர
வேண்டியுள்ளது. இது தவிர ஒவ்வொரு மூட்டைக்கும் நிர்ணயிக்கப்பட்ட எடையான 40 கிலோவுக்கு பதிலாக 42 கிலோ வழங்க வேண்டும் என்றும் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் கட்டாயப்படுத்தி எடுத்துக் கொள்கின்றனர்.
இதனால், ஒரு குவிண்டாலுக்கு ரூ.150 ரொக்கம், ரூ.125 மதிப்புள்ள நெல் என மொத்தம் ரூ.275 வீதம் உழவர்களிடமிருந்து சுரண்டப்படுகிறது. இந்த அநீதியை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்றைய தமிழக முதல்வர் விஜய் அவர்கள் தேர்தல் பரப்புரையின் போதும், அதற்கு முன்பாக பொதுக்கூட்டங்களில் உரையாற்றும் போதும், இதை சுட்டிக்காட்டி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உழவர்கள் சுரண்டப்படுவதை தடுத்து நிறுத்துவோம் என உறுதியளித்தார். ஆனால், த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகும் கூட உழவர்கள் சுரண்டப்படுவது தொடர்வது வருத்தமளிக்கிறது.
காவிரி பாசன மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை கையூட்டு வசூலிக்கப்படுவதை அரசும் ஒப்புக்கொண்டிருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சில நாள்களுக்கு முன் ஆய்வு செய்த உணவுத் துறை அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள், கொள்முதல் நிலையங்களில் கையூட்டு வசூலிக்கப்படுவதை ஒப்பக்கொண்டதுடன். இதை நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களின் வாழ்வாதாரம் சார்ந்து பார்க்க வேண்டியிருப்பதாக தெரிவித்தார். நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அது அரசின் கடமை. அந்தக் கடமையிலிருந்து அரசு தவறியதற்காக உழவர்கள் சுரண்டப்படுவதையும், அதை அரசு கண்டும் காணாமல் இருப்பதையும் பொறுப்புள்ள அரசியல் கட்சிகளால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இதனால் நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு வாங்கப்படுவதால் உழவர்கள் பாதிக்கப்படுவதையும், சுரண்டப்படுவதையும் அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அனைத்து நடைமுறை சிக்கல்களையும் அரசு உடனடியாக சரி செய்து கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 கையூட்டு வசூலிக்கப்படுவதையும், கூடுதலாக நெல் எடுக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தவெக அரசை அறிக்கை வாயிலாக அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
