சென்னை: முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி கடந்த மாதம் 20-ந்தேதி திருச்செந்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட 90 நிமிடங்களில் அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் மீதான கைது நடவடிக்கைக்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணனை, தவெக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர், தனது தொகுதியில் ஆய்வுப் பணியில் இருக்கையில் அராஜகமான முறையில் அவரை கைது செய்திருக்கிறது, இந்த தவெக அரசு. இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் ஒருபோதும் தி.மு.க அடிபணியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
