பயிர்கடன் தள்ளுபடி செய்யக்கோரி தலையில் துண்டு போட்டு விவசாயிகள் போராட்டம்

 

காஞ்சிபுரம், ஜூலை 3: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தை புறக்கணித்து, பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, தலையில் துண்டு போட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் திவ்யஸ்ரீ தலைமை தாங்கினார். கூட்டத்தில், கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பயிர்கடன் முழுவதும் தள்ளுபடி செய்வேன் எனக்கூறிவிட்டு, ஆட்சி அமைந்துடன் பயிர்கடன் அறிவிப்பை தள்ளுபடி செய்யாமல் முதல்வர் விஜய் ஏமாற்றியுள்ளார் என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

இதனை கண்டிக்கும் வகையில், அனைத்து விவசாயிகளும் குறைகேட்பு கூட்டத்தை புறக்கணித்து, வெளிநடப்பு செய்தனர். இதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில் விவசாயிகள், தலையில் துண்டு போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சட்டமன்ற தேர்தலின்போது, மாற்றத்தை கொண்டு வருவதாகக்கூறி, புதிதாக ஆட்சி அமைத்த முதல்வர் விஜய், ஏமாற்றத்தை அளித்துள்ளார். மேலும், 5 ஏக்கருக்குள் உள்ள சிறு, குறு விவசாயிகளின் பயிர்கடன் முழுவதும் தள்ளுபடி, இதர விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார்.

ஆனால், ரூ.50,000 கடன் மட்டும் தள்ளுபடி என முதல்வர் விஜய் அறிவித்துள்ள பயிர்கடன் தள்ளுபடியில் ஒரு விவசாயி கூட பயன்பெற முடியாது. கடந்த கால அரசுகள், கூட்டுறவு பயிர்கடன் முழுதும் தள்ளுபடி செய்தன. எனவே, விவசாயிகளை ஏமாற்றாமல் அனைத்து விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தும், தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் விவசாயிகள் தலையில் துண்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: