பெரம்பலூர், ஜூன் 26: வெள்ளனூர் கிராமம் அருகே சட்ட விரோதமாக கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம், புது நடுவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளனூர் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் கோவிந்தராஜ்(35). இவர் விவசாயி. இந்நிலையில் கோவிந்தராஜ் நேற்று வெள்ளனூர்- சிறுவாச்சூர் சாலையில் உள்ள பகுதியில் சட்ட விரோதமாக கிராவல் மண் கடத்தி வரும் பொழுது சிறப்புப்படை சப்-இன்ஸ்பெக்டர் மார்ட்டின்ராஜ், மண் கடத்த பயன்படுத்திய டிப்பர் லாரி, 4 யூனிட் கிராவல் மணல் பறிமுதல் செய்தார். மேலும் டிரைவர் கையும் களவுமாக பிடித்து பெரம்பலூர் அருகே செஞ்சேரி ஊரக காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து பெரம்பலூர் ஊரக காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இந்திரா வழக்குப்பதிவு செய்து, டிரைவர் கோவிந்தராஜை சிறையில் அடைத்தார்.
