வலங்கைமான், ஜூன் 26: டெல்டா மாவட்டங்களில் முக்கிய பாசன ஆறுகளில் ஒன்றான வெட்டாற்றில் ஆக்கிரமித்துள்ள நாணல்களை அகற்ற வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் 71 வருவாய் கிராமங்கள் உள்ளன. விளைநிலங்கள் காவேரியின் கிளை நதிகளான குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு, மற்றும் சுள்லணாறு மூலம் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் வலங்கைமான் பாடகச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வெட்டாற்றில் தண்ணீர் செல்லாத அளவிற்கு நாணல்கள் ஆக்கிரமித்துள்ளது. மேலும் ஆறுகளின் மையப்பரப்பில் உள்ள மண்திட்டுகள் நீரின் ஓட்டத்தினையே மாற்றும் வகையில் உள்ளது. எனவே பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பாக வெட்டாற்றில் ஆக்கிரமித்துள்ள நாணல்கள் மற்றும் மண் திட்டுகளை அகற்றவேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
