அரியலூர், ஜூன் 25: தொற்று நோய் தடுப்பு குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அரியலூர் கலெக்டர் கூட்டரங்கில், மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அனைத்து சுகாதாரத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மிருணாளினி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது: தமிழக அரசு சுகாதாரத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்படி சுகாதாரத்துறை தொடர்பான திட்டங்கள் குறித்து மாதந்தோறும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து சுகாதாரத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொற்று நோய்கள் கண்காணிப்பு, தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள், மாவட்ட மனநல சங்கம், காசநோய் பிரிவு, மகப்பேறு மற்றும் சிசு இறப்பு விகிதங்களை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் உடல் எடையை சீராக பராமரிக்கும் வகையில் ஊட்டச்சத்து தொடர்பான திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத்துறை தொடர்பான அரசின் திட்ட உதவித்தொகை பயனாளிகள் அனைவருக்கும் தவறாமல் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்வதுடன், அரியலூர் சுகாதாரத்துறை தொடர்பான திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் மிருணாளினி, தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ராம் கணேஷ், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
