ஓசூர், ஜூன் 26: ஓசூர் பேருந்து நிலையத்தில், ஆக்கிரமித்து நிறுத்திய வாகனங்களால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேருந்து நிலையத்திற்கு நாள் தோறும் சுமார் 10,000 பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பேருந்து நிலையம், தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளதால், வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் பேருந்துகள், வாகனங்கள் மற்றும் தமிழகத்திலிருந்து ஓசூர் வழியாக வட மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் பேருந்து நிலையம் அருகே செல்ல வேண்டி உள்ளது. அதே போல், ஓசூர் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்து விவசாயிகள், பயணிகள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப பொருட்கள் வாங்கவும், விற்கவும் பேருந்து நிலையம் வழியாக நகரத்திற்குச் சென்று வருகின்றனர்.
இதனால், ஓசூர் பேருந்து நிலையத்தில், பயணிகள் கூட்டம் நிறைந்திருக்கும். இந்நிலையில், பேருந்து நிலையத்தில் நடக்க கூட வழியில்லாமல், ஆக்கிரமித்து டூவீலர்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், பயணிகள் நடந்து செல்ல மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் பேருந்து நிலையத்தின் மேற்கூறைகள் உடைந்து காணப்படுவதால், மழை காலங்களில் தண்ணீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
