ஓசூர், ஜூன் 25: ஓசூரில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து, பொதுமக்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக குவிகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகரம் கர்நாடக மாநிலத்தையொட்டி அமைந்துள்ளதால், அங்கு நிலவும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை, ஓசூர் பகுதியிலும் ஆண்டு முழுவதும் காணப்படும். கடந்த சில ஆண்டுகளாக தொழிற்சாலைகள் அதிகரித்து வருவதால், குளிர்ந்த நிலை மாறி, வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக, ஓசூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிப்பதும், மாலை நேரங்களில் மழையும் பெய்கிறது. மழை, வெயில், குளிர் என சீதோஷ்ண நிலை மாறி மாறி வருகிறது.
இதன் காரணமாக, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக செல்கின்றனர். இதனை கட்டுப்படுத்த ஓசூர் மாநகராட்சி பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும். பொது இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றி, கொசு மருந்து தெளிக்க வேண்டும். பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
