செய்யாறு, ஜூன் 26: செய்யாறு சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தி கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பாண்டியன் தெரு, ஆற்காடு சாலை, ஆரணி கூட்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த இடங்களில் 3 வாலிபர்கள் கையில் கத்தியுடன் நின்றுகொண்டு பொதுமக்களை அச்சுறுத்தியபடி இருந்தனர். இதை பார்த்த போலீசார் அந்த வாலிபர்களை அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தனர். ஆனால் அவர்கள் செல்லாமல் தொடர்ந்து ரகளை செய்தனர். இதனால் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் சென்னை புளியந்தோப்பு பெரியார் நகரை சேர்ந்த சஞ்சய்(19), சந்தோஷ்குமார்(19), செய்யாறு பெரும்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சஞ்சய்(24) ஆகியோர் என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த கத்திகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
