சென்னை: பல்லாவரத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் தவெக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் ரீல்ஸ் எடுத்து, பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்லாவரத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் முரளி தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் பல்லாவரம் எம்எல்ஏ காமாட்சி, வட்டாட்சியர் செந்தில் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து ஓய்வூதிய தொகை, மகளிர் உரிமை தொகை, பட்டா, ஆதார் அட்டை ஆகியவை தொடர்பான 500க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றனர். அப்போது, எம்எல்ஏ காமாட்சி அருகில் அமர்ந்திருந்த செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தவெக செயலாளர் மின்னல் குமார், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தனது ஆதரவாளர்களுடன் செல்பி மற்றும் ரீல்ஸ் எடுத்தபடி இருந்தார். இதனை அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால், மனு அளிக்க வந்த பொதுமக்கள் புலம்பியபடி சென்றனர்.
