பந்தலூர், ஜூன் 11: பந்தலூர் அருகே பொன்னானி குழியாடி பகுதியில் சாலையில் உள்ள சிறுபாலம் சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். பந்தலூர் அருகே பொன்னானியில் இருந்து கடலக்கொல்லி மாங்காவயல் செல்லும் சாலையில் குழியாடி என்ற இடத்தில் சிறுபாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக கனமழையின்போது மழைநீர் செல்லமுடியாமல் மண் அரிப்பு ஏற்பட்டு அந்த சிறுபாலம் சேதமடைந்து காணப்படுகிறது. அதனால் பள்ளி பேருந்துகள் மற்றும் வாழை மற்றும் பாக்கு, பசுந்தேயிலை ஏற்றிச்செல்லும் லாரிகள் இந்த பாலம் வழியாக செல்லமுடிவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பழுதடைந்துள்ள சிறு பாலத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் சாலை மற்றும் சிறுபாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
