பர்ன்ஹில்-பிங்கர்போஸ்ட் செல்லும் சாலையில் விரிவாக்கம் செய்த இடம் தனியாரால் ஆக்கிரமிப்பு

ஊட்டி, ஜூன் 11: ஊட்டி பர்ன்ஹில் பகுதியில் இருந்து பிங்கர்போஸ்ட் செல்லும் சாலையில் விரிவாக்கம் செய்யப்பட்ட இடம் தனியாரால் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஊட்டி சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக விளங்கும் நிலையில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வரும்போது போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன. இதனால் கூடலூர், மைசூர் போன்ற பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்களும் நெரிசல்களில் சிக்கி குறித்த நேரத்திற்குள் செல்ல முடிவதில்லை. இதனை கருத்தில் கொண்டு கடந்த திமுக ஆட்சியின்போது ஊட்டி நகருக்குள் வராமல் லவ்டேல் சந்திப்பு பகுதியில் இருந்து மஞ்சனக்கொரை, பர்ன்ஹில் சந்திப்பு பிங்கர்போஸ்ட் சென்று கூடலூர் செல்ல புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இதற்காக குறுகலான பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டன. பர்ன்ஹில் சந்திப்பில் இருந்து தீட்டுக்கல் இடையே சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு சாலையின் பக்கவாட்டில் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதன் கீழ்புறம் தனியார் காட்டேஜ் செயல்பட்டு வருகிறது.

விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் இரும்பு கம்பிகள் கொண்டும், பச்சை நிற நைலான் போர்வை கொண்டும் தடுப்புகள் அமைத்து தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. தனியார் காட்டேஜிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சாலை குறுகியுள்ளதால் கனரக வாகனங்கள் சென்று வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக விரிவாக்கம் செய்யப்பட்ட சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் ெநரிசல் ஏற்பட்டு வருவது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பலரும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இது குறித்து விசாரித்தபோது இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கண்டு கொள்ளாமல் இருக்க இந்த பகுதியை கண்காணிக்கும் சாலை ஆய்வாளர் உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறையினரை அந்த தனியார் பலமாக கவனித்துள்ளதாகவும், இதன் காரணமாகவே நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றாமல் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories: