புதுடெல்லி: கடந்த மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வை வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்வதாக மே 12ம் தேதி தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதனை தொடர்ந்து மாணவர்கள் செலுத்திய தேர்வு கட்டணத்தையும் திரும்ப வழங்குவதாக என்டிஏ அறிவித்துள்ளது. இதனையடுத்து வரும் 21ம் தேதி மீண்டும் நீட் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து தேசிய தேர்வுகள் முகமையின் தலைமையகத்தில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரதான், ” நீட் மறுதேர்வுக்கான ஏற்பாடுகளை நாங்கள் பலமுறை ஆய்வு செய்துள்ளோம். வினாத்தாள்களை தயாரிப்பது முதல் அவை சரியான நேரத்தில் தேர்வு மையங்களை சென்றடைவதை உறுதி செய்வது வரை நாங்கள் இந்த முறை கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி அவர்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளேன்.
முன்னரும் அவர்களின் ஆதரவு இருந்தது.இந்த முறை இன்னும் கூடுதல் கவனம் செலுத்துமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளேன். மறுதேர்வை சுமூகமாகவும் பிழையின்றியும் நடத்துவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது படிப்பில் மட்டும் கவனம் செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்”என்றார்.
