எதிர்க்கட்சிகளின் விரிசல் எதிரொலி தொகுதி மறுவரையறை சட்டத்தை நிறைவேற்ற ஒன்றிய அரசு முயற்சி?

புதுடெல்லி: மகளிருக்கு 33சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கான அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா ஏப்ரல் 17ம் தேதி மக்களவையில் தோல்வியடைந்தாலும், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் சட்டமன்றங்களை கொண்ட யூனியன் பிரதேசங்களில் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான மற்றொரு மசோதாவும் மக்களவையில் நிலுவையில் உள்ளன. ஏனெனில் அரசு இவற்றை இன்னும் திரும்ப பெறவில்லை. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் விரிசல் எழுந்துள்ளது.

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் இந்த கட்சியானது மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இரண்டிலும் பிளவுபடும் வகையில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. அக்கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆளும் பாஜ தலைமையிலான ஒன்றிய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றனர்.

மாநிலங்களவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் 10 எம்பிக்களில் 7 பேர் ஏற்கனவே பாஜவில் இணைந்துவிட்டனர். இதன் மூலமாக மாநிலங்களவையில் ஆளும் பாஜவின் பலம் மேலும் அதிகரித்துள்ளது. எனவே 2029ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில் மக்களவை இடங்களை அதிகரிப்பதற்கு உதவும் தொகுதி மறுவரையறை மசோதாவை பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு மீண்டும் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

Related Stories: