கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உரிய தேதிகளில் பதவி உயர்வு வழங்க வேண்டும், சிப்காட் நிலையடுக்கு பிரிவில் உள்ள முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், அதேபோல பணி மூப்பு பட்டியலை ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு அதனை அறிவிப்பு பலகையில் ஓட்டிட வேண்டும், ஒரே இடங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பணியாளர்களை அதே வட்டத்தில் வேறு இடத்தில் மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில செயலாளர் சங்கரலிங்கம் தலைமையில் இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தின் காரணமாக வருவாய் துறை அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. கடலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் அத்தியாவசிய வேலைகள் பாதிப்படைந்துள்ளது. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என வருவாய் துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
